Friday, December 19, 2008

உன் புன்னகை போதும்


ஓர் அதிகாலையில் அவசரமாய்
ஓடி வந்து என்னில்
பற்றிக் கொண்டது
உன் புன்னகை...

நாளெல்லாம் எனைத்
தொலைத்தும்
தொலையாமலே
காலைச் சுற்றும்
பூனைக்குட்டியாய்
வீடும் வந்து
சேர்கிறது...

இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...!!!
Thanks : Pino Daeni

Tuesday, December 16, 2008

கனாக் கண்டேன் தோழி!!!

அதிகாலை சோம்பல்
முறித்து வெளி
வாசலில்
காத்திருக்கிறாய்
நான்
கோலமிட
வருவேன் என்று!!!
நானோ
வீட்டினுள்ளேயே
கோலமிட்டு கொள்கிறேன்
உன்னைப் பார்த்த
வெட்கங்களோடு!!!
முன் பனி இரவில்
என் வீட்டு
வாசலில்
நீ வரைந்துச்
சென்ற கோலத்தில்
தோற்றத்து
என்
பெண்மை!!!

சேலையைக்
கண்டாலே
சிணுங்குபவள்
அதிகாலையிலேயே
சேலையோடு
போர் புரிகிறேன்
நீ ஒருவன்
பார்க்க வேண்டுமென்று!!!
நீ அழகா
நீ வரைந்து வைத்த
கோலங்கள் அழகா என்று
உன் கேலியாலே
என் கோபங்களை
திருடிக் கொள்கிறாயே
ம்ம்ம் அப்புறம் நான்
எங்கேடா கோபித்துக்
கொள்வது...!!!
எனக்கு இந்த
மார்கழியைவிட
‘தை’ மாதம்தான்
பிடித்திருக்கு
என்றாய் வெகு
யோசனையாய்...
தெரியுமே பொங்கலுக்காக
என்றேன் குறும்பாய்
ம்ம்ம்...அதையும் விட
தித்திப்பாய்
நீயிருப்பாயே
என் கூட என்றாய்
கண்ணில் காதலாய்
அன்றிலிருந்து
நானும் எண்ணுகிறேன்
தினசரி நாட்களை!!!

Friday, December 12, 2008

அன்பில்லாத உனக்கு!!!

அப்படித்தான் அழைக்கத்
தோன்றுகிறது உன்னை...

எனக்குள் வன்முறையத் தூவிச்
சென்றாய் அன்று எதுவுமே
சொல்லாமலே...

இன்றோ என்னை
சந்தோஷிக்க விரும்புகிறாய் நட்பாய்...

இருந்தும் உனக்குத்
தெரியாமலே
உனக்கு முன்பே நான்
வாழ ஆரம்பித்து விட்டேன்...

தினமும் மழையில்
நனைகிறேன்...

இளையராஜாவோடு காற்றில்
மிதக்கிறேன்...

தோழியோடு சேர்ந்துச் சிரிக்கிறேன்...

இதுவரை பார்க்காத படங்களையெல்லாம்
விரும்பிப் பார்க்கிறேன்...

ம்ம்ம்ம்...

ஆயினும் இதுவரை
இன்றுவரை நிகழாத
சாத்தியக்கூறுகள்தான் அவை...

தனிமைகூட என்னிடம்
தனித்துத்தான் நிற்கிறது!!!

அன்று தனிமையில் என்னிடம் நீ சொல்லி வைத்த
வார்த்தைகள்....

"என்னைக் கிள்ளி உன்னை அழ வைப்பேன்"

பிரிவுகள் சாஸ்வதமல்ல... ஏன் நீ...நான்... யாருமே

"அன்பின் அர்த்தங்கள் சில நேரங்களில் பிரிதலிலும் இருக்கக்கூடும்" - கவிதாயினி

பி.கு: அன்பின் பதிவுலக மக்கட்கு, இது கவுஜ, கவிதை என்று நான் வகைப்படுத்தவில்லை :-P அதனால் தைரியமா நீங்க கும்மி அடிக்கலாம் :-)

Wednesday, December 03, 2008

எதிர்பார்க்கவில்லை நான் :-(

நீ எழுதும் எல்லா
கவிதைகளும் எனக்காகவே
இது உணரலா
இல்லை உளறலா?


Myspace Graphics

Sunday, November 30, 2008

துளிர்க்கவில்லை


தொலைதூரம் தொலைந்துப்
போனேன் மேகமாய்
நீயும் வந்து
நெஞ்சில் சாரலடித்தாய்

உன்னருகே நெருங்கும்
நேரம் தீக்கங்காய்
மாறியேனோ உயிர்
எரித்தாய்

மேகமென்று உருகாமல்
தீயென்று காயாமல்
சருகாகி உதிர்கிறேன்
உன் நினைவாலே

சருகுகள் முளைக்கலாம்
நீயும் வந்தால்
நாளை மழை வரும்
வானிலையும் மாறுகிறது
சில நாட்களாய்
நான் மட்டும் ஏனோ
இன்னும் துளிர்க்கவில்லை!!!

Tuesday, November 25, 2008

அன்புள்ள அப்பாவிற்கு


அன்புள்ள அப்பாவிற்கு...

வெகு சில காலமாய் உங்களுக்கும் எனக்கும் நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது போல் உணர்கிறேன். ஏதோ இரும்புத் திரைக்கொண்டு உங்கள் அன்பை பூட்டி வைத்துக் கொண்டது போல் தோன்றுகிறது... காரணம் உங்களுடைய வயதின் முதிர்ச்சியா...அல்லது நான் பெரியவளாய் வளர்ந்து விட்டதாய் தோன்றும் எண்ணமா...தெரியவில்லை ஆனால் மனதளவில் இன்னமும் நான் முதிர்ச்சியடையவில்லையோ?

அப்பா... நீங்கள் எங்களோடு சிரித்துப் பேசி நீண்ட நாளாகிறது... இப்போதெல்லாம் கோபம் மட்டுமே உங்களுக்கு உறவாகிவிட்டது... என்ன காரணமென்று புரிந்துக் கொள்ள நானும் முயன்றதில்லை... நீங்களும் சொல்லியதில்லை. அப்பா... ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்திருந்தப் பொழுது எப்போழுதோ நான் தெரியாமல் செய்த சின்னத் தவறுக்காக நீங்கள் திட்டியது இன்னமும் மறக்கவில்லை. அந்த கோபத்தில் வீட்டிலிருந்த அந்த இரண்டு நாட்களும் பிடிவாதமாய் சாப்பிட மறுத்தது... இப்போது நினைத்தால் இன்னும் நான் சிறுப்பிள்ளையாகவே இருப்பது போல் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் கோபத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவம் உங்கள் கோபத்தில் காணாமல் போய் விடுகிறது.

உங்களிடம் கோபப்பட எனக்கு உரிமையிருக்கிறதா என்று யோசிக்கையில் எல்லா கோபங்களும் இருந்த இடம் தெரியாமலே ஓடி விடுகிறது. உங்களுக்கும் எனக்கும் நிச்சயமாய் ஏதோ பூர்வ ஜென்ம பந்தமிருக்கு. நம் உறவு ரொம்பவும் வித்தியாசமானது புரியாதவர்களுக்கு... புரிந்தவர்களுக்கு மிகவும் புனிதமானது...

எனக்கு அப்படித்தான் அப்பா தோன்றுகிறது. அப்பா நீங்கள்தான் எவ்வளவு புனிதர். எவ்வித இரத்த உறவுமில்லாத என்னை இவ்வளவு காலமும் எந்த வித பிரதி பலனும் பாராமல் மகளாய் வளர்த்து ஆளாக்கிவிட்டிருக்கிறீர்கள். என் வரையில் நீங்கள் one in a million. ம்ம்ம் இப்போது கூட நினைவு வருகிறது 19.03.2008 என்னுடைய பெயரில் பின் பாதியை உரிமையாய் கொண்டவர் இவ்வுலகத்தை விட்டு நிரந்தரமாய் விடைப்பெற்ற நாள். ஆனாலும் எனக்கு அழத் தோன்றவில்லை.... காரணம் நான் மனசாட்சியற்றவள் என்பதால் அல்ல மனது முழுவதுமே வெறுப்பு மட்டுமே மண்டிவிட்டதால். ஆனால் உயிரோடு இல்லாத ஒருவர் மீது வெறுப்பு பாராட்டுவது மூடத்தனமாய்தான் தோன்றுகிறது.

மூன்று மாதம் கூட நிரம்பியிராத கைக்குழந்தையை உங்களிடமும் அம்மாவிடமும் கொடுத்து விட்டுச் சென்றவர் மீது எப்படி பாசம் வரும்.? அவருக்காக பரிந்து பேசும் அம்மாவிடமும் எத்தனை முறை சண்டையிட்டு இருக்கிறேன்... காரணம் உங்களைத் தவிர வேறு யாரையும் இந்தப் பிறவியில் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே. அப்பா இதற்காக நான் எப்போதுமே வருத்தப்பட்டதே கிடையாது... காரணம் நான் எப்போதுமே உங்கள் மகள் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனாலும் கடவுளுக்கு சின்னதாய் வேண்டுகோள் அடுத்தப் பிறவியிலாவது உங்கள் மகளாய் பிறக்க வேண்டும் என்று.

சின்ன வயதிலிருந்தே மற்றவர்களைவிட எனக்கு அதிகமான சுதந்திரம் தந்தே வளர்த்துவிட்டீர்கள்... அதுவே இப்போது உங்களுக்கு தொல்லையாகவும் மாறிவிட்டது.. அப்பா உங்கள் வீட்டுப் பறவைக்கு சிறகு முளைத்து விட்டது... அது இப்போது தனியே பறக்கத் துடிக்குது...

அன்றைக்கு வீட்டை விட்டுக் கிளம்பும்போது அம்மாவிடம் இனி வீட்டிற்கு வரவே மாட்டேன் என்று உங்கள் மீதுள்ள கோபத்தில் அம்மாவை காயப்படுத்தி வந்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. அப்பா இன்று ஒரு படம் பார்த்தேன்.. வாரணம் ஆயிரம்.. அப்பா மகன் பாச உணர்வை மிகவும் அழகாய் வெளிப்படுத்தியிருந்த படம். அந்தப் படம் முடிவடையும் வரை உங்கள் நினைவிலேயே நிறைந்திருந்தேன். உண்மையில் உங்கள் அன்பும் அந்த ஆயிரம் யானைகளைப் போல வலிமையானதுதான். இப்போது உங்கள் மீது இருந்த எல்லா கோபமும் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சாரிப்பா எனக்குள் இருக்கும் மன உளைச்சலில் உங்களிடம் அந்த இரண்டு நாளாய் பாராமுகமாய் இருந்ததை நினைத்தால் வலிக்கிறது. என்னையும் காயப்படுத்திக்கொண்டு உங்களையும் காயப்படுத்தியதை நினைத்தால் என் மீதே கோபம் வருகிறது. அப்பா நாம் இதுவரை மனம் விட்டு பேசியதில்லையென்றாலும் உங்களை புரிந்துக் கொண்டதாய்தான் இது வரை நினைத்திருந்தேன் ஆனால் இல்லையென்று இப்போது நிச்சயமாய் தெரிகிறது. இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்க சுய மரியாதை தடைப்போட்டாலும் மானசீகமா இந்த திறந்த மடல் வழி தங்களின் மன்னிப்பைக் கோருகிறேன். அப்பா தூரம் நம்மை பிரித்தாலும் உங்கள் இருவரின் ஆயுளுக்காக எப்போதும் பிராத்தித்துக் கொண்டிருப்பேன்...

அப்பா எவ்வளவோ சொல்ல நினைத்தாலும் எதுவுமே சொல்ல முடியாமல் உணர்வுகள் தடுமாறினாலும் நான் எப்போதுமே உங்கள் மகளாய் வாழவே விரும்புகிறேன்...

கடவுள் பூமிக்கு வருவதில்லை
ஏன் தெரியுமா?
அவருக்குப் பதில்தான்
உங்களை அனுப்பியுள்ளாரே
அப்பா நீங்கள் அந்தக்

கடவுளுக்கும் அப்பாற்பட்டவர் :-)

Thursday, November 20, 2008

நியூட்டனும் நீயும் - முதலாம் விதி


துயரத்தை விழுங்கும்
உன் இறுதிப் பார்வையில்
கசிந்து உருகி
தடமாறுகிறது
ஓர் இதயம்!!!