Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Monday, May 11, 2009

காதல்...வேண்டாம்

 தனிமை...அவஸ்தை மரணம்...தோல்வி கண்ணீர்...பிரிவு...தேடல் நட்பு...காதல்... இந்த வார்த்தைகளைப் போல் உனக்கான என் காத்திருப்புகளும் அர்த்தமற்றதுதான்!!! 
 
மாலை நேர தேநீர் 
பிடித்தப் பாடல் 
மழைக்கால மேகம் 
பக்கத்து வீட்டு ரோஜா 
வாசித்து முடிக்காத நாவல் 
கைப்பேசியின் அழைப்புப் பாடல்
 உன் நிழற்படம்
 இலக்கற்ற பார்வை என்று 
உன்னை நினைவுப் படுத்திக் கொள்வதுப் போல் 
இந்த கவிதையும் உன்னை நினைவுப் படுத்திக் கொல்லத்தான்!!!


Thursday, July 24, 2008

தோல்வி + நான் = தற்கொலை


தோல்விகளில் தளராத மனது
இன்று தற்கொலைக்குத்
தயாராகிக் கொள்கிறது
ஆம்...சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
மரணம் ஆயிற்றே
இந்தத் திருமணம்!!!

தோல்விகள் எப்பொழுதுமே என்னைத் தீண்டாமலும், சீண்டாமலும் வாழக் கற்றுக் கொண்டிருந்தாலும் சில நேரங்களில் கடவுளாய் வந்து ஆசிர்வதித்துச் செல்கிறது இந்தத் தோல்வி...தோல்வி? ம்ம்ம்...வெற்றியின் விசாலத்தை அர்த்தப்படுத்தும் அகராதி அது. வாழ்வின் பிழைகளைத் திருத்திக் கொள்ள இறையால் அனுப்பபட்ட வேதம். இந்த ஞாலத்தின் மறுமையில் வாழ்விக்கும் போதி மரங்கள்...

சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் மரண அவஸ்தையாய் வாட்டியெடுக்க தட்டுத் தடுமாறி கூட்டுக்குள் வந்து அடைந்துக் கொள்கின்றன என் கால்கள்! தலையணைகள் கண்ணீரில் நனைந்துப் போனாலும் தடுக்க வழியின்றி கைக்கட்டிப் பார்வையாளராய் காற்றில் படப்படக்கிறது நாள்காட்டி.

வெற்றிகள் வெளிச்சத்தில் நிச்சயிக்கப்பட்டால், சூன்ய நிலையில் இயற்பியலை இந்தத் தோல்விகள் இருட்டில் நிச்சயிக்கின்றன. நானும் சூன்ய நிலையின் நிசப்தத்தை யாசித்துக் கண்களை இறுக்கிக் கொள்கிறேன்.

சில காலமாய் என்னையும் கொஞ்சம் திரும்பிப் பார் என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் 'அக்னிச் சிறகு'களின் ஜுவாலைகள் என்னில் பற்றிக் கொள்ள, அவசரமாய் அதை கையில் எடுக்கிறேன். முடிக்காமல் விட்ட பக்கத்தையும் தாண்டி வேறொரு பக்கத்தில் நிலைக்கின்றன கண்கள்.

"சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்
ஃபீனிக்ஸ் பறவைகள் மறுபடியும் என் நெஞ்சில்..."

"கானல் நீராகிப் போன இந்தக் கனவுகளில்
இருந்து எப்படியோ மீண்டு வந்து...."

இந்த வரிகளை மட்டுமே என் கண்கள் பதிவு செய்துக் கொள்கிறது. நாளைய விடியலில் நானும் அந்தப் பறவையைப் போல் உயிர்த்தெழுவேன் என்ற அந்தராத்மாவின் முணுமுணுப்பு காதில் லேசாய் கேட்க, கண்களை மீண்டும் மூடிக் கொள்கிறேன்.!!!!